பைபிள் தரும் பதில்கள்
நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
நம்முடைய கவலைகளைப் பற்றி மனந்திறந்து பேச வேண்டும் என்று யெகோவா தேவன் எதிர்பார்க்கிறார். (லூக்கா 18:1-7) நம்மீது அவருக்கு அக்கறை இருப்பதால் நாம் சொல்வதைக் கேட்கிறார். தம்மிடம் பேசும்படி நம் பரலோக அப்பாவே அழைக்கும்போது, நாம் அவரிடம் பேசாமல் இருக்கலாமா?—பிலிப்பியர் 4:6-ஐ வாசியுங்கள்.
நம்முடைய தேவைகளை மட்டுமே கடவுளிடம் கேட்பது ஜெபம் அல்ல. கடவுளுடைய நெருங்கிய நண்பராக ஆவதற்கு ஜெபம் உதவுகிறது. (சங்கீதம் 8:3, 4) தினமும் நம்முடைய உணர்ச்சிகளை அவரிடம் கொட்டும்போது, நாம் அவருடைய நெருங்கிய நண்பராக ஆகலாம்.—யாக்கோபு 4:8-ஐ வாசியுங்கள்.
நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
ஜெபம் செய்யும்போது, வீண் வார்த்தைகளைச் சொல்லி அலப்புவதையோ மனப்பாடம் செய்த ஜெபங்களைச் சொல்வதையோ கடவுள் விரும்புவதில்லை. அதேசமயம், முட்டிபோட்டுக்கொண்டு அல்லது நின்றுக்கொண்டுதான் ஜெபம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், நாம் அவரிடம் மனம்விட்டு பேச வேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 6:7) உதாரணத்திற்கு பைபிள் காலங்களில் வாழ்ந்த அன்னாள், தன் மனதை வாட்டிய ஒரு பிரச்சினையைப் பற்றி ஜெபம் செய்தாள். அவளுடைய பிரச்சினை தீர்ந்தபோது அவள் மனந்திறந்து கடவுளுக்கு நன்றி சொன்னாள்.—1 சாமுவேல் 1:10, 12, 13, 26, 27; 2:1-ஐ வாசியுங்கள்.
ஜெபம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய பரிசு! சர்வலோகத்தையும் படைத்த கடவுளிடம் நம் கவலைகளை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் நமக்காகச் செய்திருக்கும் எல்லா விஷயங்களுக்காகவும் நன்றி சொல்லலாம், அவரைப் புகழ்ந்து பாடலாம். ஆகவே, நாம் ஜெபம் செய்ய ஒருநாளும் தவறக்கூடாது.—சங்கீதம் 145:14-16-ஐ வாசியுங்கள். (w14-E 07/01)